தமிழ் இலக்கிய விருந்து







<< November 2009 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
01 02 03 04 05 06 07
08 09 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30




Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:

Blogdrive


Friday, November 21, 2003
வைத்தீஸ்வரன் கவிதைகள்:

திகைப்பு

இருட்டுக்கு பயந்து
இமைக்கதவை மூடிக்கொண்டேன்
உள்ளே புது இருட்டு
"உர்" என்றது

     ----*^*---

உரிமை

அவன் வீட்டு சாக்கடையில்
அடுத்த வீட்டு நாய்படுத்துப்
புரளுவது ஒரு வழக்கமாச்சு.
உரிமையால்
ஆனமட்டும் விரட்டிப் பார்த்தும்
அது நகரவில்லை, ஒரு நாள்
ஆளுயுரத் தடியெடுத்து
ஆத்திரத்தால் அடித்துவிட
அது வள்ளென வால் மடக்கிக்
குதித்தோட,
அவன் வாய்க்குள்ளே
சள்ளென சகதி விழுந்தது தெறித்து.
அவன் வீட்டு சகதி.

     ----*^*---

குறி

வானத்தை சுட்டேன்
காகம் விழுந்தது
காகத்தை சுட்டேன்
காகம்தான் விழுந்தது.

     ----*^*---

க்ராஸிங்

மாலை யிருட்டில்
விருட்டென வெளியைக் கலக்கி
தொலைந்து போன
மின்சார ரயிலை
குறுக்கு மறுக்காய்
கேட்டுக்குள் பாய்ந்து
கூட்டமாய் தேடுகிறார்கள்
நகரத்து மக்கள்.

(நன்றி: வைதீஸ்வரன் கவிதைகள் - கவிதா பப்ளிகேஷன், தி.நகர், சென்னை - 17 - முதற்பதிப்பு: நவம்பர் 2001 - விலை ரூபாய் 90.

 


Posted at 09:12 pm by Tamil Lit
Make a comment

Thursday, November 20, 2003
பி.கே. சிவகுமார் கவிதைகள்

யேன் செய்ததில்லை? - பி.கே சிவகுமார்

வாசல்விளக்கைச் சுற்றிவந்து
விழுந்து மடியும் விட்டிலுக்கு
ஆயுள்காலம் அற்பம்தான்
ஆனாலும் ஏனொருமுறை
கூட விட்டிலைப் பார்த்தபின்னே
ஜன்னலை மூடாமல்
விளக்கணைக்க விரும்பியதில்லை

அந்தத் தெருநாய்
நண்பனுமில்லை
பகைவனுமில்லை
ஆனாலும்
பார்க்கும்போதெல்லாம்
பார்வையால் அங்கீகரிக்கும்
அலட்சியமாய் நான் நடக்க
வழிவிட்டு விலகிப் போகும்
பின்னிரவு வேளையில்
தனியாக வந்தபோதும்
தலைதூக்கிப் பார்த்ததன்றி
ஒருபோதும் உறுமியதில்லை
பின்வந்து பாய்ந்ததில்லை
ஏனதற்கு
வாங்கிப் போட்டதில்லை
வறண்டுபோன ரொட்டிகூட

தோட்ட மரக்கிளையில்
தாவிக் குதித்தோடும்
அணில் காட்டிச் சோறு
பகல்வேளையில் குழந்தைக்கு
எப்போதோ மாடியில்
காயப்போடும் கடலைக்கு
கண்வைத்து அதுவந்தால்
சத்தம்போட்டு விரட்டாமல்
சம்மதம் ஏன் சொன்னதில்லை

கொலைபழிகள் செய்யாமல்
தனிவரிசை அமைத்துப்போகும்
புத்தகத்தில் சேமிப்புக்குப்
எப்போதும் கதையாகும்
தப்பிதமாய் விழுந்துவிட்ட
சிறுதுளி பொறுக்கித் தின்று
கூடிவாழ சேதி சொல்லும்
ஆனாலும்
எறும்புப் புற்றை
கண்டவுடன் பதைபதைத்து
மஞ்சள்பொடி தூவாமல்
மண்ணெண்ணெய் ஊற்றாமல்
இருக்கட்டும் இதுவுமென்று
ஏனிங்கு இருந்ததில்லை

************************
ஞாபகங்கள் - பி.கே. சிவகுமார்

வயல்வெளிகளினூடே
ஊர்ந்து கொண்டிருக்கிறேன்
கடக்கின்ற ஒவ்வொரு அங்குலத்திலும்
உன் காலடி பார்க்கின்ற
ஞாபகங்கள்

அவ்வப்போது
பெருத்துக் கொழுத்த
எலிகள் விருந்தாகவும்
நோஞ்சானாய் சிறுத்துக்
கறுத்த எலிகள் பசிக்காகவும்
வந்து மாட்டுவதுண்டு
விழுங்குவதற்கு முன்
எல்லா எலிகளின்
கண்களின் பரிதாபத்திலும்
உன் ஞாபகங்கள்

சிலவேளைகளில்
இணைத் தேடி காத்திருக்கும்
சாரைகளின் மீது
நஞ்செனும் விந்து பாய்ச்சிருக்கிறேன்
பிணையும்போதும்
இணைந்து பிரியும்போதும்
உன்னுள் என்னை இழந்த
ஞாபகங்கள்

அவ்வப்போது
தலைக்குமேலே வட்டமிடும்
கருடன்களிலிருந்து
தப்பிக்க ஓடியிருக்கிறேன்
புதர்கள் தேடி
அப்போதெல்லாமும் கூட
உன் பின்னே ஓடிக்
களைத்த ஞாபகங்கள்

எப்போதோ சிலமுறை
கீரியின் பாதையில்
மாட்டிக் கொண்டிருக்கிறேன்
சீறிச் சீறி சண்டையிட்டபோதும்
விஷம் கக்கி கக்கி
ரத்தம் சிந்த பின்வாங்கியபோதும்
உன்னை வெல்ல முயன்று
தோற்றுப்போன ஞாபகங்கள்

எத்தனை முறை
என்னை மறந்து
உன்னை மறக்கத் தோலுரித்தாலும்
ஒவ்வொரு சட்டையிலும்
திட்டு திட்டாய்
உன் ஞாபகங்கள்


Posted at 04:37 pm by Tamil Lit
Make a comment

Wednesday, November 19, 2003
மகா கவி - பாரதிதாசன்

(அந்நாளில் ஆனந்தவிகடனில் கல்கி, பாரதி உலகமகாகவியல்ல என்றும், அவர் பாடலில்
வெறுக்கத்தக்கன உள்ளன என்றும் எழுதினார். அதற்கு மறுப்பாக எழுதப்பட்ட கவிதை
இது.)

பாரதியார் உலககவி! - அகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்!
ஓரூருக் கொருநாட்டுக் குரிய தான
ஓட்டைச்சாண் நினைப்புடையவர் அல்ல. மற்றும்
வீரர் அவர்! - மக்களிலே மேல்கீழ் என்று
விள்ளுவதைக் கிள்ளிவிட வேண்டும் என்போர்!
சீருயர்ந்த கவிஞரிடம் எதிர்பார்க் கின்ற
செம்மைநலம் எல்லாமும் அவர்பாற் கண்டோம்.

அகத்திலுறும் எண்ணங்கள், உலகின் இன்னல்
அறுப்பவைகள்; புதியவைகள்; அவற்றை யெல்லாம்
திகழ்பார்க்குப் பாரதியார் எடுத்துச் சொல்வார்
தெளிவாக, அழகாக, உண்மையாக!
முகத்தினிலே களையிழந்த மக்கள் தம்மை
முனை முகத்தும் சலியாத வீரராகப்
புகுத்துமொழிப் பேச்செல்லாம் பொன்னி யாற்றுப்
புனல்போலத் தொடர்வதுண்டாம் அன்னார் பாட்டில்.

பழையநடை, பழங்கவிதை, பழந்த மிழ்நூல்,
பார்த்தெழுதிப் பாரதியார் உயர்ந்தா ரில்லை;
பொழிந்திடுசெவ் வியௌள்ளம் கவிதை யுள்ளம்
பூண்டிருந்த பாரதிய ராலே இந்நாள்
அழுந்தியிருந் திட்ட தமிழ் எழுந்த தென்றே
ஆணையிட்டுச் சொல்லிடுவோம் அன்னை மீதில்
அழகொளிசேர் பாரதியார் கவிதை தன்னை
அறிந்திலதே புவிஎன்றால் புவிமேற் குற்றம்!

கிராமியம் நன்னாகரிகம் பாடி வைத்தார்
கீர்த்தியுறத் தேசியம் சித்தி ரித்தார்
சராசரம்சேர் லௌகிகத்தை நன்றாய்ச் சொன்னார்.
தங்குதடை யற்றஉள்ளம்; சமத்வ உள்ளம்;
இராததெனெ ஒன்றில்லாப் பெரிய உள்ளம்!
இன்புள்ளம் அன்புள்ளம் அன்னார் உள்ளம்!
தராதலத்துப் பாஷைகளீல், அண்ணல் தந்த
தமிழ்ப்பாட்டை மொழிபெயர்த்தால் தெரியும் சேதி!

ஞானரதம் போலொருநூல் எழுது தற்கு
நானிலத்தில் ஆளில்லை. கண்ணன் பாட்டுப்
போல்நவிலக் கற்பனைக்குப் போவ தெங்கே?
புதியநெறிப் பாஞ்சாலி சபதம் போலே
தேனினிப்பில் தருபவர்யார்! மற்றும் இந்நாள்
ஜெயபே ரிகைகொட் டடாஎன் றோதிக்
கூனர்களும் குவலயத்தை அளாவும் வண்ணம்
கொட்டிவைத்த கவிதைதிசை எட்டும் காணோம்!

'பார்ப்பானை ஐயரென்ற கால மும்போச்
சே'யென்ற பாரதியார் பெற்ற கீர்த்தி
போய்ப்பாழும் கிணற்றினிலே விழாதா என்று
பொழுதெல்லாம் தவங்கிடக்கும் கூட்டத் தார்கள்
வேர்ப்பார்கள்; பாரதியார் வேம்பென் பார்கள்;
வீணாக உலககவி அன்றென் பார்கள்.
ஊர்ப்புறத்தில் தமக்கான ஒருவ னைப்போய்
உயர்கவிஞன் என்பார்கள் வஞ்ச கர்கள்

'சாதிகளே இல்லையடி பாப்பா' என்றார்
'தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்' என்றார்.
சோதிக்கின் "சூத்திரற்கோர் நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறோர் நீதி"
ஓதியதை பாரதியார் வெறுத்தார். நாட்டில்
ஒடுக்கப்பட் டார்நிலைக்கு வருந்தி நின்றார்.
பாதிக்கும்படி 'பழமை பழமை என்பீர்
பழமைஇருந் திட்டநிலை அறியீர்" என்றார்.

தேசத்தோர் நல்லுணர்வு பெறும்பொ ருட்டுச்
சேரியிலே நாள்முழுதும் தங்கி யுண்டார்.
காசுதந்து கடைதெருவில் துலுக்கர் விற்கும்
சிற்றுணவு வாங்கி, அதைக் கனிவாய் உண்டார்.
பேசிவந்த வசை பொறுத்தார் நாட்டிற் பல்லோர்
பிறப்பினிலே தாழ்வுயர்வு பேசு கின்ற
மோசத்தை நடக்கையினால், எழுத்தால், பேச்சால்
முரசறைந்தார். இங்கிவற்றால் வறுமை ஏற்றார்.

வையத்து மாகவிஞர் மறைந்து போனார்;
வைதிகர்க்குப் பாரதியார் பகைவ ரேனும்
செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்;
சிலநாட்கள் போகட்டும் எனஇ ருந்தார்,
உய்யும்வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்
உலககவி அல்லஅவர் எனத் தொடங்கி
ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக்கின்றார்
அழகாக முடிச்சவிழ்த்தால் விடுவார் உண்டோ?

 


Posted at 04:27 pm by Tamil Lit
Make a comment

Tuesday, November 18, 2003
சூள் - சந்திரமதி

இலங்கையே ஒரு தீவு. அதுக்குள்ள எங்கட ஊர் இன்னொரு குட்டித்தீவெண்டு
உங்களுக்குத்தெரியும்தானே. வடக்குப்பக்கத்தில அந்த நாளைல, எங்கட அப்பா சின்னப்பி
ள்ளையா இருந்தபோது சிலர் எப்படி மீன்பிடிக்கிறவை எண்டு சொன்னேர். கூட ஒரு சி
ன்னத்துணுக்கும். இண்டைக்கு அதை உங்களோட பகிர்ந்துகொள்ளுறன்.

கடல் சூழ்ந்து இருக்கிறபடியா எங்கட சாப்பாட்டில செவ்வாய், வெள்ளி தவிர்த்து மற்ற
நாளெல்லாம் மீன் முக்கிய உணவு. மீன்பிடிக்கிறதில நிறைய விதம் இருக்கு.
இண்டைக்கு நான் சொல்லப்போறது அந்தக்காலத்தில ஆக்கள் மீன்பிடிச்ச ஒருவிதம்
பற்றி. எங்கட ஊர்ல தென்னை மரங்களும் பனைமரங்களும் நிறையத்தானே.
நல்லாக்காஞ்ச தென்னோலைகளை எடுத்து ஒண்டுக்குள்ள இன்னொண்டை வச்சு
நல்லாக்கட்டுவினமாம். அடிக்கொரு தரம் நல்லாக்கட்டுவினமாம். இப்படி இறுக்கிக்கட்டின
தென்னோலை சரியான பாரமெண்டுதான் நினைக்கிறேன். எத்தனை தென்னோலை
சேர்த்துக்கட்டுவினம் எண்டு அப்பாவுக்கு சரியாத்தெரியேல்லை.

இப்படி இறுக்கிக்கட்டின தென்னோலையை ஒரு ஆள் பிடிச்சண்டு இடுப்பில பறியோட
நல்லா இருட்டு வந்தபிறகு ஏறக்குறைய எட்டுமணியப்பிடித்தான் கடலுக்குள்ள இறங்குவி
னமாம். இன்னொரு கையில கரப்பு எண்டு சொல்லுற சாமான். அப்பா
சொல்லுறதைப்பார்க்கேக்கை. அது, நாம் கோழிகளைப்போட்டு பி
டிச்சு அடைச்சுவப்பமே, அதுபோல இருக்கும் எண்டு நினைக்கிறன். ஆனா, கடலில
மீன்களை பிடிச்சு வைக்கிறதுக்கு. இதோட, இடுப்பில கத்தியும்.

'ஒன் மேன் ஆர்மி'போல இத்தனை சாமான்களையும் ஒரு ஆள்தான் தூக்கியண்டு கடலி
ல இறங்கோணும். அந்த நல்லாக்கட்டின தென்னோலை இருக்கல்லா, அதின்ற நுனியில
நெருப்பு பத்தவச்சிருவினமாம். நெருப்பு மெலிசாத்தானாம் எரியுமாம். முழங்காலழவு
தண்ணில போய் நிண்டுவிருவினமாம். இரவில இந்த நெருப்பு வெளிச்சத்துக்கு மீன்கள்
எல்லாம் வருமாம். வர்ர மீன்களைப்பிடிக்கத்தான், கரப்பு. இல்லாட்டி கைல இருக்கிற
கத்தியால அடிப்பினமாம். பிடிச்சமீன்களைப்போடத்தான் இடுப்பில் பின்புறம் கட்டின பறி.

மிகவும் மெதுவாக எரியிற சூள், கட்டுப்போட்டிருக்கிற இடத்துக்கு வந்தோட
நூந்துபோகுமாம். அந்தக்கட்டை கத்தியால வெட்டிவிட்டபிறகு திருப்பி எரியவிடவேணுமாம்.
மொத்தமாக அந்த சூள் எரிஞ்சுமுடிக்க ஒரு ஒண்டரை மணித்தியாலம் எடுக்குமாம்.

இப்படித்தான் ஒரு நாள் ஒரு மீனவன் சூள் பிடிச்சண்டு இருக்கேக்க (ஓ, இங்க வந்து
சூள் எண்டு சொல்லுறனெல்லே. இப்பிடித்தான் அப்பாவும் சொன்னவர்.) கரையில ஒரு
ஆள் ஓடுறதைப்பார்த்தவனாம். அந்தக்காலத்தில (நூறுவருசம் இருக்குமெண்டு அப்பா
சொன்னேர்) சனம், மின்சாரம் இல்லாத நேரத்தில இரவில புழங்கிறது இல்லைத்தானே.
ஆனபடியா, மீன்பிடிகாரனும் இப்படி ஒரு ஆள்
ஓடுறதைப்பார்த்தவனாம். அவனுக்கு அடுத்தநாள்தான் தெரிஞ்சது, ஊரில ஒரு கொலை
நடந்திற்றுது எண்டு. கொலைகாரனும் பிடிபட்டுட்டான். இந்த மீன்பிடிகாரன், தான் ஒரு
ஆளைக்கண்டதா சொன்னபடியா, நீதவான் இவனையும் கூப்பிட்டனுப்பினேர்.

நீதவான், இந்த மீன்பிடிகாரன், ஓடின ஆளைப்பார்க்கேக்க எத்தனை மணி
இருக்குமெண்டு கேட்டேராம். என்னைய்யா ஒரு, ஒரு சூள் ஒண்டரைச்சூள்
இருக்குமய்யா எண்டானாம் அந்த மீன்பிடிகாரன். இப்படித்தான் மீன்பிடிகாரர்
தங்களுக்குள்ள நேரத்தைப்பற்றிக்கதைச்சிருப்பினம் எண்டு சொன்னேர் அப்பா.


Posted at 04:18 pm by Tamil Lit
Make a comment

Monday, November 17, 2003
சு.வில்வரெத்தினம் கவிதை:

காற்றுவழிக்கிராமம்:

முழுவியளத்துக்கு
ஒரு மனுவறியாச் சூனியத்தைக் கண்டு
சூரியனே திகைத்துப் போன காலையிலிருந்து
இஇப்படித்தான்
உயிர்ப்பிழந்து விறைத்த கட்டையெனக்
கிடக்கிறது இஇக்கிராமம்.

கிராமத்தின் கொல்லைப் புறமாய்
உறங்கிய காற்று
சோம்பல் முறித்தபடியே
எழும்பி மெல்ல வருகிறது.

வெறிச்சோடிய புழுதித்தெரு,
குழம்பிக் கிடக்கும் சுவடுகள் மேலாய்
சப்பாத்துக் கால்களின் அழுத்தம்,
காற்றுக்கு குழப்பமாயிருந்தது.

முற்றங்கள் பெருக்கும் ஓசைலயம்
பாத்திரங்களோடு தேய்படும் வளையல் ஒலி,
ஆச்சி, அப்பு, அம்மோயென
அன்பொழுகும் குரல்கள்-
ஒன்றையுமே காணோம்.

என்ன நடந்தது?
ஏனிந்தக் கிராமம் குரலிழந்து போயிற்று?
திகைத்து நின்றது காற்று
தேரடியில் துயின்ற சிறுவன்
திருவிழாச் சந்தடி கலைத்திருந்தமை கண்டு
மலங்க விழித்தது போல.

திறந்த வாசலினூடே வீட்டுச் சொந்தக்காரனென
சுதந்திரமாய் நுழைகிற காற்று
இஇப்போ தயங்கியது.
தயங்கித் தயங்கி மெல்ல
ஓர் வீட்டுவாசலை எட்டிப் பார்த்தது.
ஆளரவமே இஇல்லை.

இஇன்னுமொரு வாசல்; இஇல்லை.
இஇன்னும் ஒன்று; இஇல்லை.
இஇன்னும் ஒன்றை எட்டிப் பார்க்கையில்
இஇழுத்துப் பறிக்கும் மூச்சின் ஓசை.
சற்றே கிட்டப் போனது.
வாசற் படியிலே

வழுக்கிக் கிடந்தது ஓர் முதுமை.
ஊன்றுகோல் கையெட்டாத் தொலைவிலே.
இஇழுத்துப் பறிக்கும் மூச்சினிடையே
எதையோ சொல்ல வாயெடுக்கவும்
பறிபோயின சொற்கள்.
பறியுண்ட மூச்சு
மடியைப் பிடித்து உலுக்குவதாய்
காற்று ஒருகால் நடுங்கிற்று.

பதற்றத்தோடே
படலையைத் தாண்டிப் பார்த்தது
தூக்க எடுக்க துணை கிடைக்குமாவென்று.
ஆருமே இஇல்லை.

காற்றென்ன செய்யும்?
ஒப்பாரி எழுந்தால் ஏந்தியெடுத்து
ஊரின் காதிலே போடும்.
ஒரு குரலின் உரைசலும் இஇல்லையே.
உண்மையிலேயே
காற்றிற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

பக்கத்திருந்து உறவுகள்
பால் பருக்க,
கால் பிடிக்க,
கை பிடிக்க,
தேவாரம் ஓத,
கோலாகலமாய் பிரிகின்ற உயிர்
அநாதரவாய்,
அருகெரியும் சுடர் விளக்கின்றி
பறை முழக்கமின்றி, பாடையின்றி.....
அட, சாவிலும் கூட ஒரு வாழ்விருந்த கிராமம் இஇது.

காற்று பரிதவித்தது.
"எங்கே போயின இதன் உறவுகள்?"
ஒன்றும் விளங்காமல் அந்தரித்தது.
அதற்கெங்கே தெரியும்?
காற்றுறங்கும் அகாலத்தில்தான்
மூட்டை முடிச்சுக்களோடு மக்கள்
கிராமத்தை ஊமையாய் விட்டுப்போன கதை.

ஒரு பெருமூச்சை உதிர்ந்தபடி
மீண்டும் உள்ளே நுழைந்தது.
முதுமையினருகில் குந்தியிருக்கும்
இஇன்னொரு கூனற்கிழமாய் தன்னைப் பாவித்திருந்து
பிறகெழுந்து
சேலைத்- தலைப்புள் வாயைப்புதைத்தபடி
வந்தது வெளியே.

வீதியில் தலைநீட்டிய முட்செடியன்றை
வேலியோரமாய் விலக்கியபடியே
மெல்ல நடந்தது காற்று
சொல்லிக் கொள்ளாமல் போன புதல்வரைத் தேடும்
சோகந் தாளாத தாயைப் போல.

28.07.1993

(நன்றி - மதுரைத்திட்டம் ( http://www.projectmadurai.org )


Posted at 04:13 pm by Tamil Lit
Make a comment

Sunday, November 16, 2003
கவிதை, கதை, மொழிபெயர்ப்பு

"எது கவிதை" என்கிற கேள்விக்கு, இக்கவிதையைச் சொல்லலாமா?

மணிகள்

- ஞானக்கூத்தன்

சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை.

***** ***** *****
"நவீன விருட்சம்" இதழ் ஒன்றில் அசோகமித்திரன் எழுதிய கட்டுரையிலிருந்து:

சமீபத்தில் நூல் வெளியீட்டு விழாக்கள் இரண்டில் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. அதில் ஒன்று ஆங்கில நூல் வெளியீட்டு விழா. ஒரு நூல் அல்ல, இரண்டு. இரண்டுமே தொகுப்பு நூல்கள். ஒன்று சிறுகதைகள் கொண்டது. இரண்டு கவிதைகள் கொண்டது. இரண்டுமே நாடு, மொழிக்கப்பால் ஆங்கில மொழிபெயர்ப்பில் உள்ளவை. கவிதைகள் தொகுப்பில் ஒரு கவிதை அதிகபட்சமாக ஆறு வரிகள் கொண்டதாக இருக்க வேண்டும். சிறுகதைகளுக்கு அதிகபட்ச நீளம் ஆயிரம் சொற்கள். அச்சில்
மூன்று அல்லது மூன்றரைப் பக்கங்கள்.

ஒரு கதை ஒரே வரி கொண்டது. அடுத்த கதை இரு வாக்கியங்கள் கொண்டது.

"வயலின் கற்றுக் கொள்பவனோடு இச்சிறு வீட்டில் காலம் தள்ளுவது கடினம்." கைது செய்ய வந்த காவல் துறையினரிடம் துப்பாக்கியைக் கொடுத்தபோது அவள் இதைத்தான் சொன்னாள்.

***** ***** *****
இஸ்ரேல் நாட்டுப் பிரதமாகும் வாய்ப்பை வேண்டாம் என்று சொன்னபோது ஐன்ஸ்டீன் இவ்வாறு சொன்னார்: "Politics is for now. Equation is for eternity." "சமன்பாடுகள்தான் எனக்கு முதன்மையானவை, ஏனென்றால் அரசியல் என்பது நிகழ்காலத்திற்கானது. ஆனால் ஒரு சமன்பாடு என்பதோ என்றைன்றைக்குமான ஒன்று" என்று ஒரு புத்தகத்தில் இதை மொழிபெயர்த்திருந்தார்கள். அதைப் பார்த்த
எழுத்தாளர் அல்லாத என் விஞ்ஞானி நண்பர் ஒருவர் சொன்னார். இந்த மொழிபெயர்ப்பில் மூலத்தின் கவிதையையும் பளிச்சையும் காணோமே என்று. "அரசியல் இன்றைக்கு. விஞ்ஞானம் சாசுவதமானது" என்கிற தன்னுடைய வார்த்தைக்கு வார்த்தையல்லாத
ஆனால் எளிய மொழிபெயர்ப்பு எப்படி இருக்கிறதென்றும் கேட்டார்.

எப்படியிருக்கிறது?


Posted at 02:56 pm by Tamil Lit
Make a comment

Saturday, November 15, 2003
ஆர்வமூட்டும் கேள்வி - பதில்கள் II

கேள்வி: உங்கள் பார்வையில், எழுத்துக்கென்று விசேஷ முக்கியத்துவம், அந்தஸ்து
எதுவும் கிடையாது என்று ஆகிறது. அதாவது ஒருவன் எழுத்தாளனாக இருப்பதும்,
இன்னொருத்தன் ஆட்டோ டிரைவராக இருப்பதும் எல்லாம் ஒன்றுதான் என்பதாக...

அசோகமித்திரன்: எக்ஸாட்லி. அதேதான். அவரவர்கள் வேலையில் அவர்கள்
உன்னதத்தை அடைகிறார்கள். எனக்கு தெரிந்தது எழுதுவது.

***** ***** *****
கேள்வி: இப்போது ஓங்கியுள்ள இந்துத்துவக் குரல் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

சாகித்ய அகாடமி தலைவராய் இருந்த கன்னட இலக்கியகர்த்தா யூ.ஆர். அனந்தமூர்த்தி:
மதத்தின் உயர்ந்த வடிவமே ஆன்மீகம். ஆன்மீகம் தன்வயப்பட்டது. ரமணரும், ராமகி
ருஷ்ணரும் மதவாதிகள் அல்ல. ஆன்மீக முனிவர்கள். இந்துத்துவம் என்பதற்கும் இந்த
ஆன்மீகத்திற்கும் சம்பந்தமேயில்லை. ஆழமாக மதத்தில் ஈடுபட்டவன் மதவாதியாக இருக்க
மாட்டான். அத்வானி போன்றவர்களின் எண்னமெல்லாம் இந்தியாவை இஸ்ரேல்
ஆக்குவதுதான். இஸ்ரேல் நமக்கு முன்னுதாரணம் அல்ல.

***** ***** *****
கேள்வி: உங்களை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய "கடல்புரத்தில்" அச்சில்
வந்தபோது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?

வண்ணநிலவன்: என்னைப் பொறுத்தவரை எதுவுமே பாதிக்கல எனக்கு. எல்லாமே ரொம்ம சாதாரணமா செஞ்சா எல்லாரும் இப்படி பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியம் ஏற்பட்டது. மகிழ்சியோ,
கர்வமோ, அகந்தையோ எனக்கு ஏற்படல.

கேள்வி: இது தன்னடக்கமா?

வண்ணநிலவன்: நல்ல எழுத்து எது என்பது எனக்குத் தெரியும். என்னைவிட பிரமாதமாய் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

***** ***** *****
கேள்வி: இன்றைய கவிதைச் சூழலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

வண்ணதாசன்: இப்ப யாரு கவிதை எழுதறாங்க? ரொம்ப கொறைஞ்சி போச்சி. கொஞ்சம் மாறுதலா எழுதறவங்கன்னு யுவனை சொல்லலாம். வெங்கடேசனை சொல்லலாம். மனுஷ்ய புத்திரனை எல்லாரும் பாராட்டுறாங்க. ஆனா மனுஷ்ய புத்திரன் என்னை இம்ப்ரஸ் பண்ணல. அவருடைய சில அபிப்ராயங்கள் கட்டுரைகள் எனக்கு பிடிச்சிருக்கு. கவிதைகள் எனக்கு பிடிக்கல. அவரைப் பத்தி ரொம்ப ஜாஸ்தியா
சொல்றாங்களோன்னு நெனக்கிறேன். இது பின்னாடி அவரை பாதிச்சிடுமோன்னு நெனக்கிறேன். 'கழிவறையில் 90 நிமிடங்கள்' கவிதை எனக்குப் பிடிச்சிருக்கு. 'அம்மா இல்லாத ரம்ஜான்' கவிதையை திரும்பத் திரும்ப எல்லாரும் சொல்றாங்க. என்னை அது
இம்ப்ரஸ் பண்ணல. வெங்கடேசனிடம் க.நா.சு.வின் பாதிப்பு இருக்கு. இருந்தாலும் அவரின் குரலை கவனத்தில் எடுத்துக் கொள்ளணும்னு நெனக்கிறேன். பூமா ஈஸ்வரமூர்த்தில்லாம் எழுதறத விட்டுட்டாரு.

கவிதைச் சூழல் நீர்த்துப் போனதற்கு வணிகப் பத்திரிகைகள்தான் காரணம். தினமலர் வாரமலரில் 'கவிதைச் சோலை' போட்டபோதெ கவிதை பலவீனப்பட்டு விட்டது. எல்லோருக்கும் அனுபவம் பொதுவா பரம்பரை பரம்பரையாக கொறைஞ்சிக்கிட்டே வருது.
ஸ்கூல் டேஸைப் பத்தி ஒரு கவிதை எழுதிடறாங்க. இல்லேன்னா ஒரு குறுநாவல் எழுதிடறாங்க. அப்புறம் அப்பா, அம்மா, தாத்தா பத்தி உறவினர்களைப் பத்தி. பழமலை போன்றவர்கள் வந்த பிறகு, அந்த மாதிரி ஒரு ட்ரெண்ட்.

கேள்வி: பழமல எழுதுவதை நீங்கள் கவிதையாக ஏற்றுக் கொள்வீர்களா?

வண்ணதாசன்: 'குரோட்டன்ஸ்களோடு கொஞ்ச நேரம்' ஒரு தரம் படித்தேன். அதைப்பத்தி நான் யாருக்கிட்டேயும் சொல்லல. நமக்குப் பிடிச்சிருந்தா நண்பர்களிடம் சொல்வோம்லியா. அப்படி யார்கிட்டேயும் சொல்லத் தோணல. அவர் கவி
தையை விடவும் கவிதைக்குப்பின் செய்யும் காரியம் பிடிச்சிருக்கு.

***** ***** *****
கேள்வி: பிராமணர் - பிராமணர் அல்லாதார் கோஷம் ஒரு காலம் கடந்த கோஷம் என்ற கருத்து பற்றி என்ன நினைக்கறீங்க?

பிரபஞ்சன்: இது காலம் கடந்த கோஷம் என்று நான் நினைக்கல்லே. இது இரண்டாயிரம் வருசமா இன்று வரையிலும் இருக்கு. பிராமணக் கருத்தோட்டம் சார்ந்த இலக்கியங்களூம் அதை எதிர்த்துக் கலகம் செய்யக்கூடிய தலிக் இலக்கியமும் இங்க இருந்துக்கிட்டு இருக்கு. இந்தியப் பாரம்பரியத்துல புத்தர்தான் இந்தக் கலகத்தை முதன்முதல் ஆரம்பித்தவர். வேதத்தை எதிர்த்த முதல் குரலாக அவருடையது இருந்தது. இங்க தமிழகத்தில் திருமூலர்ல இருந்து இந்தக் கிளர்ச்சி ஆரம்பமாகுது.

கேள்வி: இந்த வேதம் என்பதே பிராம்மணர்களோடு சம்பந்தப்பட்டது. இந்து தர்மத்துக்கு சம்பந்தப்பட்ட சாஸ்திரம் அல்ல என்று நினைக்கிறீர்களா?

பிரபஞ்சன்: இந்து தர்மம் என்பதையே நான் பிராமணீய தர்மமாகத்தான் பார்க்கிறேன். இந்து தர்மம் என்பது மனிதர்களைப் பிரித்த ஒரு தர்மமாக எனக்குப் படுகிறது. அதோடு மட்டுமல்ல இந்து தர்மம் என்றோ கிறிஸ்துவ தர்மம் என்றோ இஸ்லாமிய தர்மம் என்றோ
ஒன்று இருக்க முடியாது. மனித தர்மம் ஒன்றுதான் இருக்க முடியும்.

***** ***** *****
கேள்வி: .... ...... சில பெயர் சொற்களை வினைச்சொற்களாக மாத்தி எழுதற உத்தியைக் கையாண்டீங்க. 'புன்னகைத்தான்' என்று எழுதுவது, சவரம் செய்து கொண்டான் என்பதை 'சவரித்துக் கொண்டான்' என்று எழுதுவது. இதுமாதிரி எழுதுவது
தமிழ் மொழிக்கு நீங்க செய்த நியாயம் என்று சொல்வதா? துரோகம் என்று சொல்வதா?

சுஜாதா: ஆழ்வார் செய்திருக்கிறார் சார்! 'காண்கின்றனர்களும் கேட்கின்றனர்களும்' என்று எழுதி இருக்கார். காண்கின்றனர் என்பதே பன்மை. அப்புறம் 'கள்' விகுதி சேர்த்திருக்கிறார்.

கேள்வி: அப்படியே நீங்க போனீங்கன்னா என்ன ஆகும் தெரியுமா? 'காலையில் அவன் மேஜையில் உட்கார்ந்து இட்லித்து விட்டு, சாம்பாரித்துவிட்டு, ஆபிசினான்' என்று எழுதினா சரியாக இருக்குமா?

சுஜாதா: (சிரித்துக் கொண்டே) அதை நான் வேண்டுமென்றே செய்வதில்லை. இதுமாதிரி பெயர்ச்சொல்லை வினைச்சொல்லாக மாத்தி எழுதறது பற்றி நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அந்த வார்த்தைகள் சரியா இல்லைனா செத்துப் போயிடும்.
Euphony-ன்னு சொல்வாங்க. காது ஓசைக்கு சரியா இல்லைன்னா தூக்கி எறிஞ்சிடுவாங்க. "அந்த வார்த்தைக்கு ஒரு மரியாதை இருக்கு. கற்பு இருக்கு. தவறுதலாகப் பயன்படுத்தக் கூடாது. தமிழ் மொழியை மீறக்கூடாது" அப்படி என்றெல்லாம் எடுத்துக்
கொள்ள வேண்டியதில்லை.

கேள்வி: பாலகுமாரன் தன்னுடைய எழுத்துக்கள் நூறு வருஷம் வாழும்னு சொல்றாரு. உங்க எழுத்துக்கள்...?

சுஜாதா: நூறு வருஷத்துக்கு தமிழே இருக்குமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு. 'மெல்லத் தமிழ் இனிச் சாகும்' என்ற நிலைதான். காலத்தால் சாகாத இலக்கி யம் படைப்பது இந்த மாதிரி தொடர்களில் எனக்கு நம்பிக்கையில்லை.

***** ***** *****
கேள்வி: எப்படி எழுத வேண்டும் என்று எங்கே கற்றுக் கொண்டீர்கள்?

பாலகுமாரன்: தி.ஜானகிராமனிடம் கற்றுக் கொண்டேன். சுஜாதா சொல்ல புரிந்து கொண்டேன்.

கேள்வி: ஜானகிராமனுடைய எழுத்தில் உள்ள கலைத்தன்மை (Litarary Art) நீங்கள் கற்றுக் கொண்டதாக நினைக்கிறீர்களா?

பாலகுமாரன்: நான் அவரிடமிருந்து நீங்கள் சொல்லுகிற கலைத்தன்மையைக் கற்றுக் கொண்டதோடு சில இடங்களில் அவரையும் விட அழகாகவே கையாண்டிருக்கிறேன் என்பது என் அபிப்ராயம். ஏனென்றால் ஜானகிராமனிடம் எனக்கு ஒப்புமை இல்லாத
இடங்களும் உண்டு.

***** ***** *****
கேள்வி: பத்திரிகைகள் எப்படி இருக்க வேண்டும்?

இந்து என். ராம்: மூன்று விஷயங்கள் ஒரு பத்திரிகைக்குத் தேவை என நினைக்கிறேன். 1. நம்பகத்தன்மை, 2. செய்திகளின் பின்புலத்தில் உள்ள விஷயங்களை அலசுவதும் அந்த செய்தி பற்றி அந்த பத்திரிகையின் கணிப்பும், 3. அதை அமைப்பதில் (lay out) உள்ள அழகுத்தன்மை.

***** ***** *****
கேள்வி: ஜே.ஜே. சில குறிப்புகள் போன்ற நாவல்களைப் பற்றி உங்கள் விமரிசனம்...

சு.சமுத்திரம்: இப்பவும் சொல்கிறேன். அந்த நாவல் ஒரு பேத்தல். வேணுமின்னு டமாரம் அடிக்கிற நாவல். நாவலைப் படிச்சபிறகு ஒரு தாக்கம் இருக்கணும். ஜேஜே இரண்டு தரம் படிச்சேன். எனக்குப் புரியல்லே.

***** ***** *****
கேள்வி: 'ஜே.ஜே. சில குறிப்புகள்' போல் 'தேரோடும் வீதி' ஏன் வெற்றி பெற முடியவில்லை.

நீல. பத்மநாபன்: ஜே.ஜே. சில குறிப்புகளை நான் மட்டுமல்ல. க.நா.சு.வோ நகுலனோ ஒரு வெற்றிப் படைப்பாக எண்ணவில்லை. தப்போ சரியோ ஸி.ஜே.தாமஸ் போன்ற மலையாள எழுத்தாளர்களின் பெயர்களை மாற்றி, தமிழ்நாட்டு வேஷத்தில் உலவவிட்டிருப்பதாய் ஒரு வதந்தி பரவியிருந்தும் கூட, இந்நாவலை தமிழில் 'பசுவய்யா'வைப் போலவோ, அதைவிடவோ மலையாளத்தில் பிரபலமான ஆற்றூர் ரவி
வர்மா என்ற கவிஞன், தம் கவிமொழியில், தமிழ்நடையின் கம்பீரம் குலையாமல் மலையாளத்தில் மொழிபெயர்த்து 'மாத்ரூ பூமி' வார இதழில் தொடராக வெளியிட்டும், அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில சிந்தனைக் கீற்றுகள், கடைசியி
ல் கெட்டிக்காரத்தனமாய் இட்டுக் கட்டி சேர்த்திருக்கும் கால விவரணப் பட்டியல் இவைகளை விட்டால், ஒரு கலைப்படைப்பு என்ற முறையில் எந்தவிதத்தில் இந்நாவல் வெற்றி பெற்றிருக்கிறதோ?

தேரோடும் வீதியைப் பொறுத்தவரை இன்று காழ்ப்புணர்ச்சி காரணமாக எழுப்பப்பட்டிருக்கும் புழுதிப் படலங்கள் அமுங்கிய பின்னர், என் முந்தைய நாவல்களைப் போல் இந்நாவலையும் கலை உலகம் ஏற்றுக் கொள்ளும் என்பதே என் நம்பிக்கை.

***** ***** *****
கேள்வி: நமது சமுதாயத்தில் பெண்களின் பங்கு என்ன என்று நினைக்கிறீர்கள்?

சோ ராமசாமி: நர்ஸ், டீச்சர் இந்த வேலைகள்தான் பெண்களுக்கு ஏற்றவை என்று நினைக்கிறேன். வீட்டைக் கவனிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். பிள்ளைகளைக் கவனிப்பதற்கு ஒரு ஆள் வேண்டும். கணவனின் சம்பாத்தியம் போதாத நிலையிலுள்ள
குடும்பங்களில் பெண்களும் வேலைக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது. அது போன்ற குடும்பங்களில் குழந்தைகளை கவனித்துக் கொள்கிற விஷயத்தில், ஆணைவிடப் பெண்ணே ரொம்பப் பொருத்தமானவள்

**** ***** *****
நன்றி: சுபமங்களா நேர்காணல்கள் (கலைஞர் முதல் கலாப்ரியா வரை) - வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை -17


Posted at 02:51 pm by Tamil Lit
Make a comment

Friday, November 14, 2003
ஆர்வமூட்டும் கேள்வி - பதில்கள் - I

கேள்வி: அறிஞர் அண்ணா 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்று கூறினார்.
ஒரு 'தேவன்' இருக்கிறான் என்கிற இறையாண்மையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கி
றதா? அப்படி இருந்தால் அவரே இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கிறார் என்பதை நம்புகி
றீர்களா?

மு.கருணாநிதி: "எங்கோ ஓர் இடத்தில் கடவுள் என்பவர் இருந்துகொண்டு, விண்ணிலும்
மண்ணிலும் இத்தனை அதிசயங்களை நடத்துகிறார் என்பதை நம்பமுடியாவிட்டாலும்,
ஏதோ ஒரு சக்தியால் எல்லாம் நிகழுகிறது என்பது உண்மை. அதற்காக அந்த சக்திக்கு
கைகால் உண்டா? பேசுமா? வரம் அருளுமா? என்றெல்லாம் அலட்டிக்கொள்ளத் தேவையி
ல்லை" என்ற கருத்தை நான் எழுதிய 'குறளோவியம்' நூலில் குறிப்பிட்டிருக்கிறேன்.
என்னைப் பொறுத்தவரையில் இந்தக் கருத்தை வலியுறுத்தும் நாத்திகன்!
ஆனால், அண்ணா அவர்களும், நானும் இந்தக் கருத்தை எவர் மீதும் திணி
க்கவோ, அல்லது ஒரு இயக்கமாக நடத்தவோ எண்ணியதில்லை. "ஆயிரம் தெய்வங்கள்
உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்" என வசை பொழிந்த பாரதியார் -
"உண்மையன்றே தெய்வமென்றுணர்வீரே!" என்று கூறிய கருத்துதான் "ஒருவனே
தேவன்" என்பதாகும்.

***** ***** *****
கேள்வி: மரபுகளை முழுதாய் உடைக்கிற நான்லீனியர் (Nonlinear) எழுத்துக்களைப்
பற்றி...

கால் நூற்றாண்டுக்கும் மேலாக மலையாள இலக்கியம் மற்றும் சினிமா உலகில் ஆட்சி
செலுத்தும் எம்.டி. வாசுதேவன் நாயர்: சோதனை முயற்சிகளால் இலக்கியம் புதுப்பி
க்கப்படுகிறது. ஒருவர் உபந்யாசம் ஸ்டைலில் சிறுகதை எழுதியிருக்கிறார். இது
புதுசுதான். அதற்காக புதுமை செய்கிறேன் என்று புரியாதபடி எழுதுவது அபத்தம். இலக்கி
யத்தில் புரிதல் முக்கியம். நான்லீனியர் எழுத்து அந்தக் குழுவில் உள்ல சிலருக்காவது
முக்கியமாக எழுதியவனுக்காவது புரியணும். புரியாத எழுத்தால் புண்ணியமில்லை.

லேபிள் முக்கியமில்லை. படைப்பு ஜீவத்துடிப்போடு படிப்பவனின் ஆத்மாவைத் தொட்டு
உலுக்குவதாக இருக்க வேண்டும். நவீனத்துவம் (Modernism) என்ற பெயரில்
பண்ணப்படும் வறட்டுத்தனமான கதை உயிரற்றது. உயிரில்லாத பிணத்திற்கு பேட்ஜ்
குத்தி என்ன பிரயோஜனம்?

***** ***** *****
கேள்வி: இந்த செக்ஸினுடைய தவிப்பும், படைப்பினுடைய தவிப்பும் வேற, வேற தளத்தி
ல் இருந்தாலும், அதை ஊக்குவிக்கிற வீர்யம் ஒண்ணுதாங்கறீங்களா?

லா.ச.ரா(மாமிர்தம்): எல்லா அடிப்படை வீர்யமும் அதுதானே. அதைத்தான் நாம நளி
னமா அழகுபடுத்துறோம். பிறகு ஒரு முழு வட்டமும் அடிச்சுட்டு அறிவுபூர்வமாக பார்க்கி
றோம். உணர்ச்சி பூர்வமா முதல்ல ஆரம்பிச்சது, தெளிஞ்சு தெளிஞ்சு அறிவுபூர்வமா ஆயி
டறது. அதுக்கு மேல் உயர்ந்த தளம் ஒண்ணு இருக்கு. அந்த நிலை அடையறப்ப
இன்னொரு பரிபக்குவம் இருக்கு. கடைசியில இதனாலயும் என்ன பயன் என்கிற விரக்தி
வந்துடறது. விரக்தி என்பது நம்பிக்கை இழந்த ஒண்ணுல்ல. விட்டுட்டு ஓடறது இல்லே. வி
ட்டு ஒதுங்கி நிற்கிறது. புளியம்பழத்துல ஒரு ஸ்டேஜ்ல ஓடு தனிச்சுப் போகுமே அதுமாதி
ரி...

***** ***** *****
கேள்வி: ஒரு அரசியல் கட்சியின் கட்டளைப்படி இலக்கியங்கள் படைக்க முடியும் என்று
நீங்கள் நம்புகிறீர்களா?

இ.எம்.எஸ். (நம்பூதரி பாட்): நிச்சயமாக இல்லை. இலக்கியம் படைப்பது என்பது தனி
ப்பட்டவர்களின் இயங்கு சக்தி... எப்படிப் படைக்கவேண்டும் எதை எழுத வேண்டும்
என்பதெல்லாம் எழுத்தாளனுடைய தனிப்பட்ட உரிமை; அதுவே அவனுடைய தனித்துவம்
கூட. எந்தக் கட்டுப்பாடும் அந்த தனித்துவத்தை அழித்துவிடக் கூடாது.

ஆனால் கட்சி சார்புள்ள எழுத்தாளர்களுக்கு கட்சி சில வழிமுறைகளை எடுத்துக் கூறுகி
றது. மாக்சிம் கார்க்கிக்கு லெனின் எழுதினார். "உங்கள் கருத்தை வெளிப்படுத்த
நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள உருவத்தைப் பற்றி அபிப்ராயம் கூற எனக்குத் தகுதியில்லை.
ஆனால் உங்கள் உள்ளடக்கம் இயக்கத்திற்கு உதவி புரிவதாக இருக்க வேண்டுமென
நான் விரும்புகிறேன். மக்கள் ஊழியனாக உங்கள் ஆளுமை வளர வேண்டும்."

கேள்வி: கலை கலைக்காகவே என்பது பற்றி....

இ.எம்.எஸ்.: என்று சொல்லிக் கொண்டே பணம் சம்பாதிப்பதில் அவர்கள் குறியாக
இருக்கிறார்கள்.

***** ***** *****
கேள்வி: வைரமுத்து, மேத்தா இவர்களின் கவிதைகளைப் பற்றி...

சுந்தர ராமசாமி: வைரமுத்து, மேத்தா பற்றியெல்லாம் எனக்கு உயர்வான அபிப்ராயம்
இல்லை. கவிதைகளுக்குச் சில அடிப்படையான குணங்கள் இருக்கு. ஒன்று சொற்சி
க்கனம். இரண்டாவது கவிதை பிறருக்கு உபதேசம் பண்ணுவதற்கான கருவி
இல்லே. அதற்கு கட்டுரைகளோ, வேறு விஷயங்களோ எழுதலாம்.

நேரடியான கருத்துக்களை கவிதையில் சொல்லி அந்தக் கருத்துக்களின் வலுவினால் கவி
தைகள் உயர்வானது என்று நினைக்கக் கூடிய போக்கு எனக்கு உடன்பாடில்லை.

***** ***** *****
கேள்வி: இந்த மாதிரி இலக்கிய பாதிப்புக்களில் சம்பந்தப்படாமல் சுஜாதா, பாலகுமாரன்
போன்றவர்கள் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப்பற்றி உங்கள் மதி
ப்பீடு என்ன?

தொ.மு.சி. ரகுநாதன்: இவர்கள் இன்றைய பத்திரிகைத்துறை உருவாக்கியுள்ள
(Consumerism) கன்ஸ்யூமரிஸத்தை நன்கு புரிந்து கொண்டுள்ள கைதேர்ந்த கி
ராப்ட்ஸ்மென் (Craftsmen). 'பட் நாட் ஆல் ஸ்கில்டு கிராப்ட்ஸ்மென் ஆர் கிரேட்
ஆர்ட்டிஸ்ட்ஸ்' (Not all skilled craftsmen are great artists). இவர்கள்
எடுத்துக் கொள்ளக் கூடிய விஷயங்கள், பல சமயங்களில், ஆரோக்கியமான இலக்கிய
வகையைச் சார்ந்தவை என்று சொல்ல முடியாது. உண்மையான கலைஞனுக்கு ஒரு
லட்சியக் கோட்பாடு உண்டு. அந்த அர்ப்பணிப்பு அரசியல் சம்பந்தப்பட்டதாக
இருக்கணும்கிற அவசியம் கூட இல்லை. இந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் அந்தக் கமி
ட்மெண்ட் இருக்கிறது என்று கூற முடியாது. கலைக்கான இந்த அர்ப்பணிப்பு இல்லாமல்
யார் எழுதினாலும் அவர்கள் தங்களைப் பத்திரிகைத்துறை கன்ஸ்யூமரிசத்துக்கு விற்றுக்
கொள்கிறார்கள் என்பதுதான் பொருள். அதே சமயம் கோட்பாடு என்பது தமக்கு ஒரு வழி
காட்டியே தவிர விலங்கு அல்ல என்பதையும், முற்போக்கான கருத்து மட்டும் ஒன்றை
இலக்கியம் ஆக்கிவிடாது, அழகியல் ரீதியான கலையம்சமும் உருவ அமைதியின்
சேர்ந்தால்தான் அது இலக்கியம் ஆகும் என்பதையும் முற்போக்கு எழுத்தாளர்கள், குறி
ப்பாக, இந்தத் துறையிலே ஈடுபட்டுள்ள இளம் எழுத்தாளர்கள் உணரனு.

***** ***** *****
கேள்வி: ஆனால் உங்கள் எழுத்துக்களில் மொழி வளமாக மிடுக்குடன் இல்லை என்ற
குற்றச்சாட்டு இருக்கிறதே...

சா.கந்தசாமி: மொழி என்பது அலங்காரமாக இருக்கக் கூடாது என்பது என்
கொள்கை. அண்ணா, கருணாநிதி, லா.ச.ரா. இவர்களைப் படிச்சதுனால ஏற்பட்ட வி
ளைவு மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான்.

கேள்வி: இலக்கியத்திற்கு அடிப்படை மொழி. அந்த மொழிக்கு
நடை, அழகு அல்லது அலங்காரம் எதுவும் தேவையில்லைன்னு நினைக்கிறீர்களா?

சா. கந்தசாமி: இலக்கியத்திற்கு மொழியே அவசியமில்லை.

கேள்வி: இப்ப தமிழ் மொழியிலதான் எழுதப் போறோம். இந்த மொழிக்கு ஒரு வளம்
இருக்கு. அதை ஒட்டி சில விஷயம் இருக்கு...

சா. கந்தசாமி: வளம் என்பது அலங்காரமல்ல. சங்க இலக்கியம் அலங்காரத்தை ஒழிச்சி
ருக்கு.

***** ***** ******
நன்றி: கலைஞர் முதல் கலாப்ரியா வரை (சுபமங்களா நேர்காணல்கள்) - வெளியீடு: நர்மதா பதிப்பகம், சென்னை - 17.


Posted at 02:44 pm by Tamil Lit
Make a comment

Thursday, November 13, 2003
லாவண்யா கவிதைகள்:

மெதுவாய்:

அம்மா,
அஞ்சுநிமிஷம் பொறு என்று
அடுத்தொரு முறை சொல்லாதே.
நீ பொறுக்கச் சொல்வது
முந்நூறு செகண்டுகள்
புரிய மாட்டேனென்கிறது உனக்கு
கவர்பால் வரவில்லையா?
கருப்புக்காபி கொடு
குடிக்கிறேன்
தீய்ந்த தோசையோ
உப்புப் போட மறந்துபோன உப்புமாவோ
ஏதோ ஒரு எழவு - தட்டில் வை.

நிதானமாய் சாப்பிட முடியாது
எட்டு மணிக்குப் பசிக்காமலிருக்க
ஐந்தரை மணிக்குத் தின்கிறேன்
இதிலென்ன நிதானம் வேண்டிக் கிடக்கிறது

டிபனைக் கட்டு.
ஐயோ, பித்தளைத் தூக்களவு வேண்டாம்
மூணு பிடியென்றால் பிண்டப் ப்ரதானமென்பாய்
நாலு பிடி வை.

வாட்டர் பாட்டிலைக் கொடு
வக்காளவோளி நாட்டில்
குடிக்கிற தண்ணீரைக் காசு பண்ணுகிறான்
கும்பலான இடமானால்
ஒண்ணுக்குப் போனாலும் காசு கொடுக்கணும்
அடுத்த பஸ்ஸில் போகமுடியாது
மூன்றாவது லேட்டுக்கு
மூதேவி கம்பெனியில்
அரைநாள் சம்பளம் அம்பேல்

ஒப்பித்து மாளவில்லை
அம்மா,
பொறுமையாய்
மெதுவாய்
நிதானமாய் - அப்பா காலத்துடன் போய்விட்டது.

இது என் காலம்
வெள்ளென எழுந்திரு
சீக்கிரம் சமை
வேகமாய் டிபனைக் கட்டு
வரட்டுமா -

பாவம் அம்மா...

****** ****** *****

கரை வரும் படகில்:

கரை வரும் படகில்
கெளுத்தியா
கெண்டையா
விலாங்கா
நண்டா
வலையா
கருத்தவள்
கைகள் கூடையில்
கண்கள் கடலில்
நெஞ்சில் அலைகள்

***** ***** *****

தீர்ப்பு நாள்:

கண்ணில்பட்ட நிலங்களையெல்லாம்
வளைத்துப் போட்டான்
கண்களை மூடிவிட்டார்கள்
பேசியே ஊரைக் கெடுத்தான்
வாயைக் கட்டி விட்டார்கள்
நட்சத்திரங்களைத்தான் விட்டு வைத்தான்
கை அவ்வளவு நீளம்
கைகளைக் கட்டி விட்டார்கள்
அகலக்கால் வைத்தே வாழ்ந்தான்
காலைக் கட்டி விட்டார்கள்
தப்பித்தவறி எழுந்துவிடப் போகிறானென்று
மூக்கில் பஞ்சடைத்து விட்டார்கள்
காற்றுப் புகாவண்ணம்.

நன்றி: இன்னும் வரவில்லை உன் நத்தை ரயில் - லாவண்யா - வெளியீடு: விருட்சம்,
சென்னை - 33

 


Posted at 02:39 pm by Tamil Lit
Make a comment

Wednesday, November 12, 2003
யூமா. வாசுகி கவிதைகள்:

முதல் சந்திப்பில் உன் முன்னால்
ஒரு வண்ணத்துப் பூச்சியின் சிறகினை
நான் பிய்த்தெரிந்தது பற்றி
எனக்கொன்றும் கவலையில்லை
பல நூறு வண்ணத்துப் பூச்சிகளும்
பறவைகளும் மலர்களும்
மரங்களுமுடைய என் தோட்டத்தில்
உன்னைக் குறித்து எதுவும் தெரியாமல்
அனுமதிக்க முடியாது
பிய்ந்த சிறகுகளுக்கான ரத்தம்
உன்னிடமிருந்து ஒழுகுவதைப்
பார்க்க வேண்டும் நான்.

***** ***** *****

செய்தி அனுப்பிச் சொற்ப நேரமாகிறது - நீ
இந்நேரம் துடித்திறங்கி வந்திருக்க வேண்டும்
அலட்சியமா என்னிடம் - நெரிப்பேன் நின்
நீலகண்டம் சடையறுப்பேன்
நீ கெட்ட கேட்டுக்குக் கங்கை வேறு தலையில்
கேட்பதற்கு ஆளில்லை என்று
எங்காவது போய்க் கிடக்காதே
இதோ அழைக்கிறேன் வந்து நின்று ஏவல் செய்
கொலுசணிந்த பெண் குறித்து
நான் கவிதை எழுத வேண்டியிருக்கிறது
மயானச் சாம்பலையெல்லாம்
துடைக்க மறந்து வந்தாயானால்
தொலைந்தாய் நீ
முடிவிற் சேர்ந்தேன் ஒரு காதலின் சன்னிதானம்
பூஜை முறை எதுவுந் தெரியாத
முரடனாயிற்றே நான்
கவிதையில் என் ஆவியைக் கடத்திவைத்து
அர்ப்பணிக்க வேண்டும் அவளுக்கு
என் மொழி முதிர உதவி செய்
வசை மொழிந்தேன் என வருந்தாதே
செல்லக் கொஞ்சலை செலுத்திப் பார்த்தேன்
நான் கலைஞன், நீ கடவுள்
காலம் கடந்தும் நாம் இருப்போமாகையால்
உதவிசெய்து ஒத்திருப்போம்
ஒருவருக்கொருவர்
என் காகிதங்களில் வந்து கட்டுண்டு கிட
வரைகின்ற வார்த்தைகளையெல்லாம்
விசையுறச் செய்
வரும்போது உன் நந்தியையும் நாகத்தையும
அழைத்து வா -
அடிக்கடி சிகரெட்டும் டீயும் வாங்கி வர
அவையும் எனக்கு வேண்டும்.

***** ***** *****

நன்றி: அமுதபருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு - யூமா. வாசுகி - வெளி
யீடு: தமிழினி, சென்னை - 14.


Posted at 02:36 pm by Tamil Lit
Make a comment

Previous Page

Next Page